ஈரான் தனது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை (16) இந்தத் தகவலை வெளியிட்ட ட்ரம்ப், ஈரானிய யுரேனியத்தை “அணுசக்தி தூசி” (nuclear dust) என்று குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கை உலுக்கி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் ஓர் அமைதி உடன்படிக்கையை நெருங்கிவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் நிரந்தரமாக அணு ஆயுதம் தயாரிப்பதைக் கைவிடவேண்டும் என்பதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், ஈரான் உடன்படிக்கைக்கு வர மறுத்தால், அதன் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகை தொடரும் என்றும், உள்கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்புள்ளது. உடன்படிக்கையில் கையெழுத்திட தான் பாகிஸ்தான் செல்லவும் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
மற்றொரு முக்கிய முன்னேற்றமாக, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் வியாழக்கிழமை (16) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவித்திருந்த ட்ரம்ப், இன்னும் 4 அல்லது 5 நாட்களில் இரு நாட்டுத் தலைவர்களும் சமாதான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகைக்கு வரவுள்ளார்கள் என்றும் எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், தாங்களும் போர் நிறுத்தத்தை மதிப்போம் என்று ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
