இலங்கையின் முன்னாள் காவல்துறை மாஅதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு (தற்கொலை) செய்து கொண்டுள்ளதாக காவல்துறை உத்தியோகப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அத்துருகிரிய பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்தே இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான அவர், உடனடியாக முல்லேரியா ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட போதே ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக முல்லேரியா மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

1986ஆம் ஆண்டு உதவிப் பயிற்சி காவல்துறை அத்தியட்சகராக (ASP) தனது சேவையைத் தொடங்கிய சி.டி. விக்ரமரத்ன, சுமார் 34 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய காவல்துறை மாஅதிபர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிலையில், பதில் காவல்துறை மாஅதிபராக இவர் பொறுப்பேற்றார்.
அதன் பின்னர், இலங்கையின் 35ஆவது காவல்துறை மாஅதிபராக உத்தியோகப்பூர்வமாகப் பதவியேற்றுச் செயலாற்றிய அவர், கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றிருந்தார். இந்த நிலையில், அவரது இந்தத் திடீர் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
