மட்டக்களப்பு, வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாலையடிவட்டை மருத்துவமனை வீதியைச் சேர்ந்த, 37ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ. சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் வீட்டிற்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து நிலத்தில் விழுந்து கிடந்த நாவல் பழமொன்றை சிறுவன் எடுத்து உண்டுள்ளார்.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலத்தில் கிடந்த நாவல் பழத்தில் பாம்பின் விஷம் பட்டிருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அதனை உட்கொண்டதன் காரணமாக சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
