தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தடையாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, ஆளுநரையும் மத்திய பாஜக அரசையும் கண்டித்து நாளை காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முடியாத வகையில் மத்திய பாஜக அரசு அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகில் நாளை காலை 11 மணிக்கு தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்ப்பாட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை tamilnadu.congress@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
