அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப்படம் அடங்கிய வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான சிறப்பு கடவுச்சீட்டுகளை வெளியிட அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள மாதிரி வடிவமைப்பின்படி, இந்த கடவுச்சீட்டுகள் ட்ரம்ப்பின் உருவப்படம், அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் வரிகள் மற்றும் அமெரிக்க தேசியக் கொடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், ட்ரம்ப்பின் கையொப்பம் தங்க நிறத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பதிப்பு கடவுச்சீட்டுகளை வொஷிங்டன் கடவுசீட்டு முகவரகத்தில் (Washington Passport Agency) மட்டுமே கிடைக்கும் என்றும், விண்ணப்பிக்கும் எந்தவொரு அமெரிக்க குடிமகனும் இதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் 250 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களை ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ட்ரம்ப்பின் உருவம் பொறித்த சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட அமெரிக்க மின்ட் (US Mint) திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க காகிதப் பணத்தாள்களில் கையெழுத்திடும் முதல் பதவியில் இருக்கும் ஜனாதிபதி என்ற பெருமையை ட்ரம்ப் பெறவுள்ளார்.
புகழ்பெற்ற கென்னடி கலை மையம், ‘ட்ரம்ப்-கென்னடி மையம்’ என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.
வொஷிங்டன் டிசியில் 250 அடி உயரத்தில் “ஆர்க் டி ட்ரம்ப்” (Arc de Trump) என்ற பிரம்மாண்ட வெற்றி வளைவு அமைக்கப்படவுள்ளது.
தற்போதுள்ள அமெரிக்க கடவுசீட்டுகளில் நிலவில் மனிதன் கால் வைத்த நிகழ்வு மற்றும் சுதந்திர தேவி சிலை போன்ற வரலாற்றுச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில், ட்ரம்ப்பின் உருவம் பொறித்த கடவுச்சீட்டுகள் குறித்த அறிவிப்பு அந்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதியை இடித்துவிட்டு அங்கு நடன அரங்கம் கட்டும் ட்ரம்ப்பின் திட்டத்திற்கு எதிராக, வரலாற்று பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
