கச்சத்தீவு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பிராந்திய அரசின் தலைவராக உள்ள ஒருவருக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்குள் வெற்றியைத் தழுவிக்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
அரசியல் என்பது நடிப்பதை விடவும் மாறுபட்ட விடயம் எனவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டுமெனவும், அதற்கான பலம் அவருக்குக் கிடைக்கப்பெற வேண்டும் என வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் கச்சத்தீவு பெருவிழா இடம்பெறும் போது, வீசாவைப் பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பிராந்திய அரசின் தலைவராக உள்ள ஒருவரால் இலங்கை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியாது எனவும், பிராந்தியம் தொடர்பான தீர்மானங்களை மட்டுமே எடுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தான பகுதி என்பதனால், அவர் ஒரு சுற்றுலாப்பயணியாக வருகை தந்து பெருவிழாவில் கலந்து கொண்டு ஆசீர் பெற்றுச் செல்ல முடியுமெனவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் தேசியத்துவத்திற்கும் தொடர்ந்து போராடத் தயாராக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
