வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
“கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது” என்ற எண்ணக் கருவுக்கமைய ஜனாதிபதி நிதியம்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இணைந்து குறித்த திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத்,ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை உறுதிப்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்துடன் இது குறித்த வழிகாட்டுதல்கள் எதிர்வரும் தினங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.