கடந்த வெள்ளிக்கிழமை தமிழரசு கட்சியின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ்ப்பாணம் ஃபாக்ஸ் ஹோட்டலில் சந்தித்தன. உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கும் போது தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே புரிந்துணர்வோடு செயல்பட முடியுமா என்பது தொடர்பாக ஆராயும் நோக்கிலான ஒரு சந்திப்பு.
இந்த சந்திப்புக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்பு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் “டாண் டிவி”யில் ஒரு நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தனும் கலந்து கொண்டார்கள். இவர்களோடு நானும் கலந்து கொண்டேன். நிகழ்ச்சியின் பேசுபொருள், அண்மையில் தமிழ் அரசியலில் அதிகம் விவாதிக்கப்பட்ட, அரச வர்த்தமானியாகும்.
அரசாங்கம் மேற்படி வர் த்தமானியை மீளப் பெற்றிருக்கும் ஒரு பின்னணியில், அவ்வாறு அரசாங்கம் பின்வாங்கியதற்கு தங்களுடைய தலைவர்களின் கடுமையான உழைப்புதான் காரணம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியும் மாறி மாறி உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் பின்னணியில், மேற்படி நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது.
தொடக்கத்தில் இரண்டு கட்சி பிரதிநிதிகளும் அமைதியாக ஒருவர் மற்றவரைத் தாக்காமல் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் கஜேந்திரன் சுமந்திரனை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சிக்கத் தொடங்கினார். தமது கட்சிக்காரர்களின் ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் தனது கட்சித் தலைவர் ஆற்றிய உரை என்பவற்றின் விளைவாகத்தான் அந்த வர்த்தமானி மீள பெறப்பட்டது என்று அவர் வாதிட்டார். குறிப்பாக தமிழரசுக் கட்சியின் சிறீதரனை மென்மையாக அனுகிய அவர் சுமந்திரனை கடுமையாக விமர்சித்தார்.
பதிலுக்கு சயந்தனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விமர்சிக்கத் தொடங்கினார். இரண்டு பேர்களும் ஒருவர் மற்றவரைக் குற்றம் சாட்டினார்கள். ஒருவர் மற்றவர் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள். ஒருவர் மற்றவரை நோக்கிச் சூழ்ச்சிக் கோட்பாடுகளை பிரயோகித்தார்கள்.
நான் அந்த மோதலை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் ஓய்ந்தபின் கேட்டேன், அப்படியென்றால் இன்னும் ஒரு மணி நேரத்தில் நடக்கவிருக்கும் சந்திப்பில் என்னத்தைப் பேசப் போகிறீர்கள்? என்று.
நிகழ்ச்சிப் பதிவு முடிந்ததும் இருவரும் முகத்தில் வெறுப்பைக் காட்டாமல் சகஜமாக உரையாடினார்கள். சிரித்துக்கொண்டு வெளியேறினார்கள். ஆனால் தொலைக்காட்சியில் அவர்கள் காட்டிய சண்டை அவர்களுடைய ஆதரவாளர்களால் மேலும் விஸ்தரிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வாக்குவாதத்தின் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்குக் காட்டும் படம் என்ன? கொடுக்கும் செய்தி என்ன ?
தொலைக்காட்சியில் அப்படி மோதியவர்கள் நிகழ்ச்சிப் பதிவு முடிந்த பின் எப்படித் தேநீர் கோப்பைகளோடு சகஜமாக கதைக்க முடிந்தது?மிக மோசமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துவிட்டு எதுவுமே நடவாதது போல சகஜமாக சிரித்துக் கொண்டு வெளியேறினார்கள். ஆனால் அதைப் பார்க்கும் மக்களுக்கு எப்படிப்பட்ட சித்திரம் கிடைக்கும்? அது தேசத்தைக் கட்டி எழுப்ப உதவும் ஒரு சித்திரமா? “தொலைக்காட்சிக்கு முன் அமைதியாக புரிந்துணர்வோடு கருத்தைக் கூறிவிட்டு தேனீர் கோப்பையோடு வேண்டுமானால் சண்டை பிடித்திருக்கலாம்” என்று ஒரு பல்கலைக்கழக துறைத் தலைவர் மேற்படி மோதல் தொடர்பாக கருத்துத் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது இருப்பது கட்சி அரசியல் தான். கட்சி அரசியல் என்றால் என்ன? தமது வாக்காளர்களுக்கு வரும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பது அல்லது அதற்காக போராடுவது அல்லது அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை உட்பட ஏதோ ஒரு நடவடிக்கையை எடுப்பது இவற்றின் மூலம் தமது மக்களுக்கு நீதியை பரிகாரத்தை நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பது. அதற்கு தானே கட்சிகள் இருக்கின்றன அதற்காகத்தானே மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள் அதற்காக தானே நாடாளுமன்றத்திலும் மாகாண சபையிலும் உள்ளூராட்சி சபைகளிலும் அவர்களுக்கு வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றன. அது அவர்களுடைய கடமை அதைச் செய்துவிட்டு எங்களுடைய கட்சியால்தான் அந்த வெற்றி கிடைத்தது என்று வெற்றிக்கு உரிமை கூறுவது எதைக்காட்டுகின்றது? தமிழ் தேசிய அரசியல் கட்சி அரசியலாகச் சுருங்கியதன் சீரழிவை காட்டுகின்றதா?
இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்தின் பின் ஃபாக்ஸ் கொட்டையில் நடந்த சந்திப்பின் முடிவில் இரண்டு கட்சிப் பெரும் அவர்களும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்கள். அக்கருத்துக்களின்படி புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கும் பொழுது தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை என்று தெரிகிறது.
அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த மோதலின் நீட்சியும் அகட்சியமாகத்தான் உள்ளூராட்சி சபைகளிலும் அரசியல் செய்ய போகிறோம் என்றால் உள்ளூராட்சி சபைகள் உருப்படாது. உள்ளூராட்சி சபைகளை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கு உரிய தேவையான பொதுவான வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வரவே முடியாது. ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை எதிர்ப்பார்கள் குழப்புவார்கள். வட மாகாண சபையைக் குழப்பியது போல.
அதாவது கட்சிச் சண்டைகளின் உள்ளூர் களங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் மாறக்கூடிய ஆபத்தே அதிகமாக தெரிகிறது.
இதுதான் தமிழ் தேசிய அரசியல் கட்சிச் சூழல் என்றால் அது தேசிய மக்கள் சக்திக்கு அதிகம் வாய்ப்பானது. தமிழ் கட்சிகள் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒரு வித்தியாசம் உண்டு. என்னவெனில், கொழும்பில் இதுவரை காலமும் ஆட்சி செய்தது மிதவாதப் பாரம்பரியத்தில் வந்த, பெருமளவுக்கு மேட்டுக்குடியினர் ஆகிய சிங்கள தலைவர்கள் தான்; கட்சிகள் தான். ஆனால் இப்பொழுது ஆட்சியில் இருப்பது கட்சி அல்ல,ஒரு இயக்கம். இரண்டு முறை நசுக்கப்பட்ட போதும், இரண்டு முறை தடை செய்யப்பட்ட போதும், தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த ஓர் இயக்கம். எனவே அதை எதிர்கொள்வது என்பது இதற்கு முன் இருந்த தென்னிலங்கை ஆளுங்கட்சிகளை எதிர்கொண்டது போல அல்ல.
உள்ளூராட்சி சபை தேர்தலை நோக்கி இந்த அரசாங்கம் கண்டியில் தலதா மாளிகையில் உள்ள புனித தந்த தாதுவை பொதுமக்கள் தரிசிப்பதற்காகத் திறந்து விட்டது. 16 ஆண்டுகளின் பின் அவ்வாறு திறந்து விட்டதன் மூலம் அவர்கள் சிங்கள பௌத்த கூட்டுணர்வை தம் வசப்படுத்தி வாக்குகளாக மாற்ற முயற்சித்தார்கள். அப்படித்தான் சர்ச்சைக்குரிய அரச வர்த்தமானியும் ஒரு தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்டது. அதன் விளைவுகள் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான உணர்வுகளை ஒருங்குவிக்க உதவும் என்பதை நன்கு தெரிந்து கொண்டும் அவர்கள் அந்த வர்த்தமானியைப் பிரசரித்தார்களா?.அது தமிழ்த் தேசிய அரசியலில் வாக்குகளைத் திரட்ட உதவியது. மறுவளமாக அப்படி ஒரு வர்த்தமானியைக் கொண்டு வந்ததன் மூலம் சிங்கள பௌத்த பெருந்தேசிய உணர்வைத் திருப்திப்படுத்தலாமா என்று அரசாங்கம் சிந்தித்ததா?
ஏற்கனவே தையிட்டி விகாரை விவகாரத்தை தீர்க்க முடியாத அரசாங்கம் அரசாங்கம், அந்த சர்ச்சை தணிவதற்குள்ளேயே, காணிகளைச் சுவிகரிக்கும் வர்த்தமானியை ஏன் வெளிப்பட்டது? அதுவும் ஒரு தேர்தல் காலத்தில் ? தமிழ் மக்களால் எதிர்க்கப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதன்மூலம் சிங்கள பௌத்த வாக்காளர்களை கவரும் உள்நோக்கம் அதில் இருந்ததா? மேலும் தமிழ் கட்சிகளின் கவனத்தை புதிய விடயங்களின் மீது திசை திருப்பும் உள்நோக்கமும் அதில் இருந்ததா?
கொஞ்ச காலம் தையிட்டி; இடையில் ஆனையிறவு உப்பு; பின்னர் வர்த்தமானி இப்படியே காலத்துக்கு காலம் ஏதாவது ஒரு புதிய விஷயத்தின் மீது தமிழ் கட்சிகளின் கவனத்தை திசை திருப்பி விட்டால், தமிழ் மக்கள் ஒட்டுமொத்த வழி வரைபடம் ஒன்றை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த போராட்டம் ஒன்றை நோக்கி ஒருங்கிணைய மாட்டார்கள். ஒவ்வொரு கட்சியும் தனக்கே பாராட்டு கிடைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு போராடும் ஓர் அரசியல் களத்தில் “தேசத்தை திரட்டுவது;தேசத்தைக் கட்டி எழுப்புவது” போன்ற வார்த்தைகளுக்கு புனிதம் இருக்காது.
நிலாந்தன்.