அரியாலை – செம்மணி சித்துபாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் தொடர்ச்சியில் மேலும் ஐந்து மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது வரை மொத்தமாக ஏழு மனித உடல்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில், மேம்பாட்டு பணிகளுக்காக குறித்த மயானத்தில் குழிகள் தோண்டப்பட்டபோது, அங்கு மனித எலும்புச் சிதிலங்கள் காணப்படுவதால், சட்டமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், நீதவான் நேரில் வருகை தந்து ஆய்வு செய்ததுடன், சம்பவ இடத்தை ஸ்கேன் செய்வதற்கும், முறையாக அகழ்வு பணிகளை முன்னெடுத்துச் செல்லவதற்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மூலம் ஆரம்பத்தில் இரண்டு உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் காலநிலை மோசமடைந்ததையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் மேலும் ஐந்து மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தமாக ஏழு மனித உடல்கள் தொடர்பான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மனிதப் புதைகுழி என ஏதேனும் பகுதியை அறிவிக்க, குறைந்தபட்சம் மூன்று மனித மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட வேண்டும் எனும் சட்ட நிபந்தனை அடிப்படையில், தற்போது அந்தப் பகுதியில் மனிதப் புதைகுழி என பிரகடனப்படுத்தக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் மூலம் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.