யாழ்ப்பாணத்தில் 1996ல் நிகழ்ந்த கிருஷாந்தி வழக்கு – மரண தண்டனை பெற்ற 5 பேரின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு
1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் ஒருவருடன் 5 பிரதிவாதிகளும் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை, இலங்கை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது ஏகமனதாக நிராகரித்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ள சூழலில், ஜனாதிபதி அவர்களால் மன்னிப்பு வழங்கி, தண்டனையை 20 ஆண்டுகளாகக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்காக, சிரேஷ்ட பிரதி மன்றாடியர் நாயகம் லக்மாலி கருணாநாயக்க நீதிமன்றத்தில் வாதம் நிகழ்த்தினார்.
அதில், சட்டப்படி வழங்கப்பட்ட கால எல்லை முடிந்த பிறகே மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இயலாது என்றும் அவர் கூறினார். மேலும், அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதியிடமிருந்து மன்னிப்பு பெறுவது என்பது அவரது முழுமையான உரிமை எனவும், அதற்காக குற்றவாளிகள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மனுதாரர்கள் தங்களது மனுவில் பல முக்கியமான தகவல்களை மறைத்துள்ளனர் என்றும், முழுமையான உண்மையை முன்வைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், மனு நிராகரிக்கப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
இந்த அனைத்து வாதங்களையும் பரிசீலித்த நீதியரசர்கள் குழு, மனுவை விசாரணைக்கு எடுக்க முடியாது என தீர்மானித்து நிராகரிப்பதாக அறிவித்தது.
