வவுனியா, சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (02.07) இரவு 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு இரவு வருகை தந்த உயிரிழந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வீட்டினை தீயிட்டு கொழுத்தி உள்ளார்.
இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதும் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிசாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராம மக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடகாலமாக சமயபுரம் பகுதியில் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.
சம்பவத்தில் வசந்தி (வயது30,) அவரது தாயாரான இந்திரா (வயது69), என்ற இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஸ்ணகுமார் (வயது 45) என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


