இலங்கையில் வாகன இறக்குமதியின் போது இடம்பெறும் பாரிய வரி ஏய்ப்பு மற்றும் தரவு மோசடிகளைத் தடுப்பதற்காக புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சுங்கத் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) ஆகியவற்றுக்கிடையே புதிய டிஜிட்டல் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் ‘ASYCUDA World’ மென்பொருள் மூலம் வாகனத்தின் இயந்திர இலக்கம், உற்பத்தி ஆண்டு மற்றும் செலுத்தப்பட்ட வரி விபரங்கள் நேரடியாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு டிஜிட்டல் முறையில் அனுப்பப்படும்.
கோபா நடத்திய விசாரணையில், இரு திணைக்களங்களுக்கும் இடையே முறையான கணினி இணைப்பு இல்லாததால், வாகனத்தின் உற்பத்தி ஆண்டு, இயந்திரத் திறன் மற்றும் உற்பத்தி நாடு போன்ற தரவுகள் மாற்றப்பட்டு மோசடிகள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நேரடித் தரவுப் பரிமாற்றத்தின் மூலம் வாகனங்களின் இயந்திரத் திறனைக் குறைத்துக் காட்டி வரி ஏய்ப்புச் செய்வது மற்றும் உற்பத்தி ஆண்டை மாற்றி பதிவு செய்வது போன்ற மோசடிகள் இனி சாத்தியப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு முன்னதாக, சுங்கத் தரவுகளை நிகழ்நேரத்தில் சரிபார்க்கும் அதிகாரம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
