அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு பாகிஸ்தான் நோக்கிப் பயணித்த ஈரான் பிரதிநிதிகளை ஏற்றிச் சென்ற விமானத்துக்கு, “மினாப் 168” என பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்க – இஸ்ரேல் இணைந்து முதல் முதலாக ஈரானில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதல் மினாப் நகரில் உள்ள ஷஜாரே தய்யேபே என்ற மகளிர் ஆரம்பப் பாடசாலையை இலக்குவைத்து நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் 168 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள், குழந்தைகள் உட்பட ஈரானில் மொத்தமாக உயிரிழந்த மற்றும் பாதிப்புக்குள்ளான பொதுமக்களை நினைவுகூரும் வகையில் இந்த விமானம் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் பாகிஸ்தான் நாட்டுக்குப் பயணித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த உயிரிழப்புகளால் ஏற்பட்ட சோகத்தை தாங்கியவாறு இந்த விமானம் பாகிஸ்தானில் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் இந்த விமானம் தரையிறங்கிய பின்னர், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf, விமானத்தின் இருக்கைகளில் வைக்கப்பட்டிருந்த நான்கு குழந்தைகளின் புகைப்படங்களை காட்டும் படமொன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை நினைவுகூரும் மனிதாபிமான அஞ்சலியாக பார்க்கப்படுகிறது.
