இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலின் போது, ‘IRIS Dena’ கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் ஈரானுக்கு கொண்டு செல்வதற்கும் இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
IRIS Dena கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
இந்தத் தாக்குதலானது முன்னெப்பொழுதும் இல்லாத ஒரு பாரிய யுத்தக் குற்றமாகும்.
இது சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும், 1949 ஜெனிவா உடன்படிக்கையையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது எனவும், இதற்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையின்படி, இரு அமைச்சர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
