அசாத் மௌலானாவின் பொய் வாக்குமூலத்தை வைத்து சலே பழிவாங்கப்படுகிறார்: சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத வலையமைப்பை முற்றாக அழித்து, தேசிய பாதுகாப்புக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய தேசிய சொத்தான சுரேஷ் சலே, எந்தவித நீதிமன்ற உத்தரவோ அல்லது முறையான சான்றுகளோ இன்றி கைது செய்யப்பட்டு, கொடூரமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருவதற்கு கடுமையான கண்டனத்தை முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று(15.06.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காகத் தேசிய அளவில் 7 ஆணைக்குழுக்களும், சர்வதேச ரீதியாக அமெரிக்காவின் எவ்.பி.ஐ. உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற புலனாய்வு அமைப்புகளும் 4 பிரத்தியேக விசாரணைகளை மேற்கொண்டு ஏற்கனவே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளன.

முறையான சாட்சியங்களின் அடிப்படையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தால் அதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்பட்ட விதம் கொடூரமானது. எந்தவித நீதிமன்ற உத்தரவோ சான்றுகளோ இன்றி கைது செய்யப்பட்டு அநாகரிகமாக நடத்தப்படும் சுரேஷ் சலேயிடம், அண்மையில் பெறப்பட்ட சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில், இந்தத் தொடர் சித்திரவதைகள் காரணமாக அவர் தற்கொலை செய்துகொள்ளும் கடுமையான மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் நடந்து தற்போது 7 வருடங்கள் ஆகின்ற போதிலும் தாக்குதல் நடத்தியவர்கள், அதற்கு உதவியவர்கள் என அனைவரும் அடையாளம் காணப்பட்டு, 24 பேருக்கு எதிராகத் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சட்டமா அதிபரினால் 23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் எவ்.பி.ஐ. அமைப்பு 2 வருடங்களாக விசாரணை நடத்தி, இது ஐ.எஸ்.ஐ.எஸ். சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நேரடித் தாக்குதல் என்றும், இதில் எவ்வித உள்நாட்டு அரசியல் பின்னணியும் இல்லை என்றும் சான்றுகளுடன் உறுதியாகக் கூறியுள்ளது.

இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்தியது சஹ்ரான் என்பதும் நாம் அறிந்ததே. இதற்கான வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டது மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிமின் தொழிற்சாலையிலாகும் என்பதுடன், அவரின் இரு மகன்களே இந்தத் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர்.

சஹ்ரானின் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கி வருவதாக இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பே நாட்டின் அரச புலனாய்வுப் பிரிவினர் மிகத் தெளிவாக எச்சரித்திருந்தமையுடன், சஹ்ரானைக் கைது செய்ய இரண்டு பிடியாணை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

தெளிவான சான்றுகள் இருந்தும் அன்று சி.ஐ.டி. சஹ்ரானைக் கைது செய்யத் தவறிவிட்டது. அவ்வாறு அன்று தங்களின் கடமையைத் தவறவிட்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்கள் தான், இன்று எந்தவித சாட்சியமும் இன்றி சுரேஷ் சலேயைத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கடந்த 4 மாதங்களாகச் சிறை வைத்துச் சித்திரவதை செய்கின்றனர்.

அசாத் மௌலானா குறிப்பிடும் குறிப்பிட்ட ஒரு திகதியில் சுரேஷ் சலே இந்த நாட்டில் இருக்கவில்லை என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அவர் 3 வருடங்களாக நாட்டில் இல்லை என்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட இமாம் கமிஷன் அறிக்கையிலும், அசாத் மௌலானா குறிப்பிடும் அந்த இரகசிய வீடு அவர் சொன்ன திகதிக்குப் பின்னரே கட்டப்பட்டது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அசாத் மௌலானாவின் வாக்குமூலம் முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஆணைக்குழுவே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அப்படிப்பட்ட ஒரு பொய்யான வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே சலே பழிவாங்கப்படுகின்றார்.

இதன் மூலம் தற்போதைய அரசும், சி.ஐ.டியும் இணைந்து உண்மையான இஸ்லாமிய தீவிரவாதத்தை முற்றாக மூடிமறைக்க முற்படுகின்றனர். மக்கள் மற்றும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரின் கவனம் வேறு பக்கம் திருப்பப்பட்ட பின்னர், மீண்டும் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கி நாட்டில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு இந்த சி.ஐ.டியும், அரசும், இதற்கு உடந்தையாக இருக்கும் கத்தோலிக்க பாதிரிமார்களுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

புலிப் பயங்கரவாதிகளின் வலையமைப்பை அழித்த சுரேஷ் சலேயைக் கைது செய்து, இந்தத் துயரத்துக்கு உள்ளாக்குகின்றமை குறித்து வேறு யாரும் அல்ல, புலிப் பயங்கரவாதிகளே தற்போது மகிழ்ச்சியடைவார்கள். அவர்களைத் திருப்திப்படுத்தவே இந்த அரசு இதனைச் செய்கின்றது என்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Namal and Mahinda
"18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!" - நாமல் ராஜபக்ச
police arrest
தெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!
negombo prison
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!
telegram
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
accident
A9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி: இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த சோகம்!
pillayan
'பிள்ளையான்' தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!