ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

கால்பந்து தொடரில் மெஸ்ஸி விளையாடி வரும் நிலையில், அவரது தந்தையின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஊடகங்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அக்குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மெஸ்ஸியின் ஊடக அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் “ஜோர்ஜ் தற்போது ஒரு குறிப்பிட்ட உடல்நலச் சூழலை எதிர்கொண்டுள்ளார். 68 வயதான அவர் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதோடு, அவரது தற்போதைய உடல்நிலை சீராகவும், சாதகமான முறையில் முன்னேற்றமடைந்து வருகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் எந்த வகையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விபரங்களை மெஸ்ஸியின் குடும்பத்தினர் வெளியிடவில்லை.
கால்பந்து தொடரின் தனது முதலாவது லீக் போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக ஆர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய மெஸ்ஸி, தான் ஒரு கடினமான தனிப்பட்ட சூழ்நிலையைக் கடந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், அது குறித்து அவர் மேலதிக விபரங்கள் எதனையும் அப்போது பகிர்ந்து கொள்ளவில்லை.
ஆர்ஜென்டினாவில் ஜோர்ஜ் மெஸ்ஸி இறந்துவிட்டதாக சில ஊடகங்களில் தவறான செய்திகள் பரவிய தின அன்றே இந்த குடும்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“இத்தகைய காலக்கட்டங்களில் ஊடகங்கள் பொறுப்புடனும், விவேகத்துடனும், மனிதநேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஒரு நபரின் ஆரோக்கியமும், அவரது அன்புக்குரியவர்களின் மன அமைதியும் ஊகங்களுக்கும் அல்லது பொறுப்பற்ற ஊடக ஆர்வத்திற்கும் உட்பட்டதாக இருக்கக்கூடாது” என குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவரது உடல்நிலை குறித்த அடுத்தகட்ட விபரங்கள் தேவைப்படின், அவை குடும்பத்தினரால் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
