நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர் முன் எச்சரிக்கை மையத்தால் இன்று (06.08.2026) காலை 10.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (07.08.2026) காலை 10.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின்படி மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என கடற்தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடல் பகுதிகள் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை வலுப்பெறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன்பு, எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு கடற்தொழிலாளர் மற்றும் கடற்படைத் தரப்பினரை வானிலை ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
