தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள பேரணியில், தமது கட்சி பங்கேற்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமையை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் பீடத் தீர்மானத்திற்கு அமைய, பொதுஜன பெரமுனவின் அழைப்பை ஏற்று பேரணிக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் செய்தவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததாகக் குறிப்பிட்ட வீரவன்ச, திருடர்களைப் பிடிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கமே ஊழலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்டுள்ள ஏழு ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும், அவை நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
செப்டம்பர் 12 பேரணியில் தமது கட்சியின் பங்கேற்பு தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட கட்சிகளுக்கான ஆதரவு அல்ல எனவும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான ஆரம்பகட்டமாக இது அமையும் என்றும், அரசாங்கத்தின் ஆபத்தான சர்வாதிகாரப் போக்கை” எதிர்கொள்ள இத்தகைய ஒற்றுமை அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
