கடந்த 31 ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் திருகோணமலை – தோப்பூர் – மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் சகோதரி சுப்பிரமணியம் கமலாதேவி, புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார்.

தாய் – தந்தை, உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்த சகோதரி, நேற்றைய தினம் தனது 79வது வயதில், நிறைவேறாக் கனவோடு உயிரிழந்துள்ளார்.
சகோதரனின் விடுதலைக்காக, அரசதிகாரத்திடம் மன்றாடி மனமுடைந்து, புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆளாகி நீண்ட நாட்களாக படுக்கை நோயாளியாக இருந்து அவர் உயிரிழந்துள்ளார்.
நான் சாகும் போதாவது, என் பிள்ளை தலைமாட்டில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து வந்ததாக தெரியவருகின்றது.
தனது சகோதரியை பார்க்கக்கூட முடியாத துர்ப்பாக்கியசாலியாக, சிறைக்குள் தேம்பிக்கொண்டிருக்கும் அரசியல் கைதி சிவகுமார் போன்றோரின் இயல்பு வாழ்வுக்கு இனிமேலாவது இலங்கை அரசு மனிதநேயத்துடன் முடிவொன்றை எடுக்குமா என பலரும் தமது துயர் பகிர்வுகளை வெளியிட்டு வருகின்றது.
