கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாத்தளை, கலுதேவள, ரத்தோட்ட வீதியில் வசித்து வந்த திருமணமாகாதவரான (52) வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று (21ஆம் திகதி) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில், இந்திய நாடாளுமன்றத்தை சித்தரிக்கும் படப்பிடிப்பை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா மற்றும் பல இந்திய முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் வருகை தந்துள்ளனர்.
இதன்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வேடமிட்டுத் தயாராகிக் கொண்டிருந்த நபர் கழிவறைக்குச் செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்த அவரை உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
