இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!

இலங்கைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் தடைகளை மீறிச் சென்ற ஒரு சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளன.

‘M/T Tifani’ எனும் பெயரிடப்பட்ட, எந்தவொரு நாட்டு அடையாளமும் அற்ற அந்த சரக்குக் கப்பல் நேற்று இரவு அமெரிக்கப் படைகளால் வழிமறிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மற்றும் அமெரிக்க போர்த்திணைக்களம் தெரிவித்துள்ளன.

சர்வதேச கடல்சார் சட்டங்களின் அடிப்படையில் கப்பலுக்குள் நுழைந்து சோதனையிட்டதாகவும், இந்த நடவடிக்கை எந்தவித மோதல்களும் இன்றி சுமுகமாக நடந்து முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்குத் தேவையான பொருட்களை வழங்கி வரும் சட்டவிரோத அமைப்புகளின் செயல்பாடுகளைத் தடுப்பதும், தடைகளை மீறிச் செல்லும் கப்பல்களைக் கட்டுப்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இது குறித்து அமெரிக்க போர்த்திணைக்களம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகையில், சர்வதேச கடல் பகுதிகள் என்பது தடை விதிக்கப்பட்ட கப்பல்கள் பதுங்குவதற்கான புகலிடம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளதுடன், இந்தச் சோதனையின் போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் காணொளி காட்சிகளையும் பகிர்ந்துள்ளது.

இதேவேளை, இந்து சமுத்திரத்தில் அமெரிக்க இராணுவத்தால் இடைமறிக்கப்பட்ட ஒரு எண்ணெய்க் கப்பல், இன்று அதிகாலை திடீரெனத் திசைமாறி, தற்போது இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ (430 மைல்கள்) தென்கிழக்கில் தனது இருப்பிடத்தைக் காட்டி வருவதாக கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

MarineTraffic தரவுகளின்படி, சுமார் 300,000 டன் கொள்ளளவு கொண்ட ‘திஃபானி’ என்ற மசகு எண்ணெய்க் கப்பல் தற்போது சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய்க் கப்பலுக்கு அமெரிக்காவின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (USAID) தடை விதித்துள்ளது. மேலும், இது ஈரானுடனான தொடர்புகளுக்காக, அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்ட ஒரு இந்தியக் கப்பல் நிறுவனத்துடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பிடத் தரவுகளின்படி, ‘திஃபானி’ ஏப்ரல் 10 ஆம் திகதி வளைகுடாப் பகுதியிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவால் இடைமறிக்கப்படுவதற்கு முன்பு, ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கையின் காலி துறைமுகத்திற்கு அருகில் சிறிது நேரம் நின்றதாக காட்டப்படுகிறது.

மரைன் டிராஃபிக் தகவலின்படி, அது சிங்கப்பூரை ஞாயிற்றுக்கிழமை சென்றடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்!
vijay
மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்: அதிரும் தமிழக அரசியல்!
may 18
நினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!
may 18
தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
tvk
விசிக-வின் அதிரடி முடிவை நோக்கித் தமிழகம்! தமிழக அரசியல் களத்தில் இறுதி நிமிடப் பரபரப்பு!
vijay tvk
"பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்!"- அதிரடி முடிவெடுக்கிறாரா விஜய்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!