உலகின் சமையல் தலைநகராகக் கருதப்படும் பாரிஸில், சர்வதேச அளவில் பெரும் மதிப்புமிக்க ‘Gault&Millau’ சமையல் வழிகாட்டியில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் ஈழத்தமிழரான நிரோஜன் குலசிங்கம்.
பாரிஸின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘Capucci’ உணவகத்தின் தலைமைச் சமையல் கலைஞராக பணியாற்றி வரும் இவர், பத்து ஆண்டுகால அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பின் மூலமாக இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

திரைப்படத் துறையில் ‘ஆஸ்கார்’ விருது எத்தகைய உயரிய கௌரவமாகக் கருதப்படுகிறதோ, அதே போன்ற தொரு அங்கீகாரமே ‘Gault&Millau’ வழிகாட்டியாகும். சுவை, தரம், படைப்பாற்றல் மற்றும் சமையல் நுணுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உணவுத் துறை நிபுணர்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்ட பிறகே உணவகங்களும் சமையல் கலைஞர்களும் இந்த சர்வதேச பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.
அந்த வகையில், ஆயிரக்கணக்கான சர்வதேச உணவகங்களுக்கு மத்தியில் பாரிஸின் மையப்பகுதியில் ஒரு ஈழத்தமிழரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது, தமிழர்களின் சமையல் திறமைக்குக் கிடைத்த உலகத்தரம் வாய்ந்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிரோஜன் குலசிங்கம், எளிய கனவுகளுடன் பிரான்ஸ் நாட்டிற்குத் தன் பயணத்தைத் தொடங்கியவர். இத்தாலிய சமையல் கலையில் தேர்ச்சி பெற்று, கடந்த பத்து ஆண்டுகளாக பாரிஸில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ‘Gault&Millau’ வழிகாட்டியில், அவர் ‘யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்’ என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டிருப்பது, உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு பெரும் பெருமையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.
தனக்குக் கிடைத்துள்ள இந்த வரலாற்றுச் சாதனை குறித்துப் பேசிய சமையல் கலைஞர் நிரோஜன் குலசிங்கம்:
“இந்த அங்கீகாரம் எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; இது எனது மக்கள், எனது நிலம் மற்றும் எனது தாய்மொழியான தமிழுக்கு நான் சமர்ப்பிக்கும் மரியாதை. குறிப்பாக, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு ஈழத்தமிழனாக இந்த வழிகாட்டியில் இடம்பெற்றிருப்பது எனது வாழ்வின் மிக உன்னதமான தருணம்.
ஒரு எளிய பணியாளராகத் எனது பயணத்தைத் தொடங்கினாலும், தெளிவான இலக்குகளுடனும், முறையான கடின உழைப்புடனும் செயல்பட்டால் பாரிஸ் போன்ற உலக நகரங்களில் தமிழர்கள் சிகரத்தைத் தொட முடியும் என்பதற்கு இதுவே சான்று.”
உலக அரங்கில் தமிழர்களின் அடையாளத்தையும் உழைப்பையும் முன்னிறுத்தியுள்ள நிரோஜன் குலசிங்கத்தின் இந்த சாதனை, புலம்பெயர் இளம் தமிழர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
