தாய்வான் அதிபர் லாய் சிங்-தே (Lai Ching-te) கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில், அருகில் நின்றிருந்த கோயில் நிர்வாகி ஒருவர் உடல்நலக்குறைவால் அவர் மீது வாந்தி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை காலை, தாய்வான் அதிபர் லாய் சிங்-தே, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தைனான் (Tainan) நகரில் உள்ள ஒரு கோயிலில் பொதுமக்களுக்கு வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்

அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த கோயில் நிர்வாகி லின் பெய்-ஹுவோ (Lin Pei-huo) என்பவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் தனது வாயை மூடிக்கொள்ள முயன்றபோதும், கட்டுப்பாடின்றி வாந்தி எடுத்தார். இதில் வாந்தி அதிபரின் இடது கைப் பகுதி மற்றும் ஆடையில் பட்டது.
இந்த எதிர்பாராத சம்பவத்தால் நிகழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டது. எனினும், அதிபர் லாய் சிங்-தே பதற்றமடையாமல், உடனடியாக அந்த நிர்வாகியின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்தார். அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.
பின்னர் உரையாற்றிய அதிபர், அந்த நிர்வாகியின் குடும்பத்தில் சிலருக்கு ‘நோரோவைரஸ்’ (Norovirus) பாதிப்பு இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவருக்கு இந்த திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் விளக்கமளித்தார். தற்போது அந்த நிர்வாகி நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சற்று ஓய்வெடுத்த பிறகு அந்த நிர்வாகி மீண்டும் மேடைக்கு வந்த போதிலும், மற்றவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் ஓய்வெடுக்கச் சென்றார். அதிபர் தனது உடையைச் சுத்தம் செய்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தினார்.
