கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க ஆகியோர் நாட்டினுள் ஐஸ் போதைப்பொருளை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு வீட்டை ஹம்பாந்தோட்டையின் மயூரபுர பகுதியில் களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

குடு நிலங்கவின் நெருங்கிய கூட்டாளியான எம்பிலிபிட்டிய சுரங்க என்ற நபரை களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினர் கைது செய்யப்பட்ட பின்னரே இந்த வீடு தொடர்பில் தெரியவந்துள்ளது.
வெல்லவாய, கிரியகொல்லவைச் சேர்ந்த 20 வயதான சம்பத் பண்டார என்ற நபர் தொடர்பில் சுரங்க வழங்கிய தகவலுக்கு அமைய, பாணந்துறை அருக்கொடவில் வைத்து ஐஸ் போதைப்பொருடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மயூரபுர வீடு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டபோது தாம் அங்கு தங்கியிருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டில் மூன்று ஈரானியர்கள் ஐஸ் போதைப்பொருளை தயாரித்ததாகவும், பின்னர் கெஹெல்பத்தர பத்மேவின் தரப்பினருக்கு சுமார் 14 கிலோ ஐஸ் போதைப்பொருளை விற்றதாகவும் சந்தேக நபர் கூறியதாக கூறப்படுகிறது.
குறித்த மூன்று ஈரானியர்கள் இப்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் சந்தேக நபர் கூறினார்.
வீட்டை சோதனையிட்டபோது, ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 52 லிட்டர் ரசாயனங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு அறை ஆய்வகமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து போதைப்பொருளை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தயாரிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் வாகனமும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் இது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஏற்கனவே போதைப்பொருள் கொண்டு செல்லும் போது ஒரு பொலிஸ் அதிகாரியால் பொறுப்பேற்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ஒரு மோட்டார் வாகனம் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கெஹல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க ஆகியோர் நாட்டில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தியதாக கூறப்படும் சுமார் 50,000 கிலோகிராம் ரசாயனதொகை கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவால் மித்தெனிய பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
இதன் மாதிரிகளை பரிசோதித்த தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறியது.