மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய எல்லைக்குள் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈரானிய மண்ணில் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் கைமாறாக, அந்தந்த நிறுவனங்களின் உட்கட்டமைப்புகள் சிதைக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானிய செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பின்வரும் நிறுவனங்கள் முதன்மையான இலக்குகளாகக் குறிவைக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப நிறுவனங்கள்: அப்பிள் (Apple), மைக்ரோசொப்ட் (Microsoft), கூகுள் (Google), இன்டெல் (Intel), ஐ.பி.எம் (IBM).
ஏனைய நிறுவனங்கள்: டெஸ்லா (Tesla), போயிங் (Boeing).
குறிப்பாக, ஏப்ரல் முதலாம் திகதி (இன்று) முதல் இந்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என ஈரான் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள இந்த நிறுவனங்களின் தரவு மையங்கள் (Data Centers) மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஈரானின் ஏவுகணை அல்லது சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என சர்வதேச அரசியல் அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் அமேசான் நிறுவனத்தின் சில தரவு மையங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா தற்போது தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்தப் பிராந்தியங்களில் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
