லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: ஆன்லைன் மூலம் சாட்சியமளிக்க கோட்டாபயவுக்கு யாழ். நீதிமன்றம் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நிகழ்நிலை (Online) ஊடாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைத்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர், அதற்கு முதல் நாள் ஆவரங்கால் பகுதியில் வைத்து காணாமல் போயினர்.

இதனைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களின் உறவினர்களால் 2012 ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, இச்சம்பவம் குறித்து சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் ஆரம்பமாகின.

வழக்கு விசாரணைகளின் போது, 2017 ஆம் ஆண்டு சாட்சியாளர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில், கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு மன்று உத்தரவிட்டது.

எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என அவர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தார்.

இச்சூழ்நிலையில், நிகழ்நிலை ஊடாக சாட்சியமளிக்க அனுமதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பித்திருந்தார்.

இது தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உறுதிப்படுத்தும் சத்திய கடதாசியை சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (02) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ச நிகழ்நிலை ஊடாக மன்றில் தோன்றி தனது சாட்சியங்களை பதிவு செய்வதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!