யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையின் ஆயுட்கால உறுப்பினரான என். அசோகன் என்பவரால், சங்கத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதோடு, கடந்த 2026 மே 17 அன்று நடைபெறவிருந்த சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தைத் தடுக்கும் வகையில் ஓர் இடைக்காலத் தடையுத்தரவையும் அவர் பெற்றிருந்தார். இவ்வழக்கு 2026 ஜூன் 26 அன்று கொழும்பு மாண்புமிகு மாவட்ட நீதிபதி ஜி.எல். கன்னங்கர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ஆர். செந்தில்மாறன், தலைவர் என். குணதர்ஷன், உப தலைவர் ஆர். சுரேந்திரன், பொருளாளர் எஸ். சொபிசன், காப்பாளர் ஜி. வசந்தன், உறுப்பினர் யோ. கிரிசாந்த் மற்றும் உதவிப்பொருளாளர் எஸ். சசிதரன் ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. ஜி.ஜி. அருள்பிரகாசம் அவர்களினால் என். அசோகனுக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி எதிர்வழக்குடன் கூடிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்தப் பதில் மனுவில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் அதன் பழைய மாணவர் சங்கமானது 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது என்றும், இது 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தன்னார்வ சங்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என். அசோகனின் சட்டவிரோதமான, தவறான மற்றும் தீங்கிழைக்கும் நடத்தையின் காரணமாகவே, வருடாந்த பொதுக்கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, கணக்கறிக்கைகளையும் அங்கீகரிக்க முடியாமல் போயுள்ளது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், என். அசோகன் சவாலுக்கு உட்படுத்தியுள்ள ‘ராகா இசை நிகழ்ச்சி’ தொடர்பான வரவு செலவுகள் யாவும் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டங்களில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும், இவ்விரு கூட்டங்களிலும் கலந்துகொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அவற்றில் ஒருபோதும் கலந்துகொள்ளவில்லை என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம், தாம் குற்றம் சுமத்தியுள்ள அனைத்து விடயங்களையும் உள்வாரி ரீதியாகத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு அவருக்குப் போதிய வாய்ப்புகள் இருந்தன என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரியின் அதிபர், தலைவர், உப தலைவர், பொருளாளர், காப்பாளர், உதவிப்பொருளாளர் மற்றும் உறுப்பினர்களை அவமதிப்பதற்கும், அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கும், அத்துடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் அதன் கொழும்பு பழைய மாணவர் சங்கத்திற்கு இழுக்கை ஏற்படுத்துவதற்காகவுமே என். அசோகன் வேண்டுமென்றே, திட்டமிட்டு, தீய எண்ணத்துடன் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார் என்றும் அதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அசோகன் தனது முறைப்பாட்டு மனுவின் 27 வது பந்தியில், ராகா இசை நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சைக்குரிய தொகைகள் எந்தவொரு கணக்கறிக்கையிலும் பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள போதிலும், அவராலேயே முறைப்பாட்டு மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ‘P10’ எனக் குறிக்கப்பட்ட ஆவணம் அந்த நிலைப்பாட்டிற்கு முரணாக அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், என். அசோகன் சத்தியப் பிரமாணத்தின் கீழ் பல பொய்யான மற்றும் ஜோடிக்கப்பட்ட கூற்றுக்களைக் கூறியுள்ளதால், சிவில் நடைமுறைச் சட்டக்கோவையின் விதிகளுக்கு இணங்க அவருக்கு எதிராக ‘நீதிமன்ற அவமதிப்பு’ நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் கொழும்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் எதிர்வழக்குக் கோரிக்கைக்கான மறுப்பு மனுவையும், 4-வது பிரதிவாதியின் ஆட்சேபனைகளையும் வரும் 2026 ஜூலை 3 ஆம் திகதியன்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இவ்வழக்கில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ஆர். செந்தில்மாறன் உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. ஜி.ஜி. அருள்பிரகாசம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
