நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆயுதங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்றத்தில் நேற்று (05) தெரிவித்தார். இந்தக் கருத்து பாதுகாப்பு அமைச்சினால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சுனா எம்.பி. கூறியதாவது: “அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன. 2009க்கு முன்னர் பிரபாகரன் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.

இந்தநிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது மற்றும் தவறானது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துக்கள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.