கொழும்பு கொள்ளுப்பிட்டி மற்றும் மாளிகாவத்தை பகுதிகளில் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சியை முறியடித்து, 05 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி ஆல்பர்ட் வீதியில், நேற்று புதன்கிழமை (10) இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரொருவர், தான் வைத்திருந்த பையை தூக்கி எறிந்துவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
மற்றைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீசப்பட்ட பையிலிருந்து ரி-56 துப்பாக்கி ஒன்று, 30 தோட்டாக்கள், கத்தி ஒன்று மற்றும் மூன்று கையடக்கத் தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வழங்கிய தகவலைத் தொடர்ந்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தப்பிச் சென்ற சந்தேக நபர் உட்பட மேலும் மூவர் மாளிகாவத்தையில் உள்ள போதிராஜா மாவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், குறித்த சந்தேக நபர்களை கைது செய்யும்போது, 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு 14, வெல்லம்பிட்டி, மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25, 40 மற்றும் 48 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவரின் உத்தரவின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு சென்றதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸார்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.