யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் தமிழ்த் தேசியத்திற்கு விரோதமான கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் நேற்று வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறீதரன் எம்.பி.,
“உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி கட்சியின் உயர்மட்டக் குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
ஆகவே இந்தச் சந்திப்பு தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்கே இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்தது.
அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில், அது பற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டியது அவசியம் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
” அறம் தவறிய மனிதர்களை இயற்கை நிச்சயம் தண்டித்தே தீரும்! காலம் மிகவும் பொல்லாலது”
என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டதுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் காணொளியையும் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த காணொளியில் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, பிரபாகரன் போதைவஸ்த்து வியாபாரத்தில் ஈடுபட்டது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது மறைக்கலாம் என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது சி.வி.கே.சிவஞானம் – டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடைய சந்திப்பின் மூலம் இலங்கை தமிழரசு கட்சியானது பதவிக்காக எந்த அளவுக்கும் செல்வதற்கு தயாராகிய விடயம் தற்போது புலப்படுகிறது. இதேவேளை இந்த சந்திப்பின் பின்னணியில் தமிழரசுக் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது எதிர்ப்பை முகநூலில் பதிவுகளை இட்டு வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் தமிழ் அரசியல் வட்டாரங்களிடையே இவர்களுடைய சந்திப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள கருத்து வேறுபாடுகள், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கூட்டணிகள் அமைப்பில் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.