யுத்த காலத்தில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு உள்ள தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கூற்றின்படி, தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களில் திருத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது, பெரும்பாலும் வடக்கு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் பாதுகாப்பிற்காக இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றனர். இவர்களில் பலர் இன்னும் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.
இவர்கள் மீண்டும் நாடு திரும்ப முயற்சிக்கும்போது, நடைமுறையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் முக்கிய தடையாக அமைந்துள்ளதால், அவற்றில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைந்த மூவர் தலைமன்னார் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இதில் மூன்று வயது குழந்தை உட்பட 24 வயது இளம் தம்பதியினர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் போது, இவர்கள் கடந்த 2023 மே மாதத்தில் படகில் இந்தியா சென்றதுடன், இராமேஸ்வரத்திலிருந்து மீண்டும் இலங்கைக்கு வந்தது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
