திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை, திருடர்கள் மீண்டும் உரிய வீட்டின் வாசலிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ள விசித்திரமான சம்பவம் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தபாலக வீதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஞாயிற்றுக்கிழமை (14) இருவரால் திருடிச் செல்லப்பட்டிருந்தது.
மோட்டார் சைக்கிள் திருடப்படும் காட்சிகள் அவ்விடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவியில் பதிவாகியிருந்தன.
இக்காட்சிகளின் அடிப்படையில், திருடர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நபர்கள், இன்று அதிகாலை வேளையில் அதனை மீண்டும் வாகனம் திருடப்பட்ட அதே வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை வீட்டு உரிமையாளர் வெளியில் செல்ல முற்பட்டபோது, திருடப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டுள்ளார்.
வெறும் மோட்டார் சைக்கிளை மட்டுமன்றி, அதன் ஆவணங்கள், தலைக்கவசம் ஆகியவற்றையும் திருடர்கள் வாகனத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
