திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் குளியாப்பிட்டியவில் உள்ள தமது வீட்டின் காணியொன்றில் வைத்து இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க நிஷாந்த என்பவரே இவ்வாறு தமது உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹெக்கர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இவருடன் சேர்த்து நான்கு அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்ய நிதி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, இச்சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இரண்டு தடவைகள் இந்த அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காக, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
