அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் அதன் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இருவரும், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையை விட மேலதிகமாக பணியாளர்களை இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை அப்போதைய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பணிகளுக்காகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
