கடந்த மாதம் ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் நாட்டுக்குச் சொந்தமான எம்/வி டூஸ்கா சரக்குக் கப்பலின் 22 மாலுமிகள், தாயகம் திரும்புவதற்காக பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எம்/வி டூஸ்கா கப்பலில் இருந்த 22 மாலுமிகளை அவர்களின் தாய்நாடான ஈரானுக்குத் திருப்பி அனுப்பும் நோக்கில், இன்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அமெரிக்கப் படைகள் ஒப்படைத்தன” என அதன் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்வழித் தடைகளை மீற முயன்றதாகக் கூறி, கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் திகதி இந்தக் கப்பலை அமெரிக்க கடற்படை வழிமறித்துக் கைப்பற்றியது. இந்த நடவடிக்கையை ஈரான் கடுமையாகச் சாடியதோடு, இது ஒரு “கடற்கொள்ளை” நடவடிக்கை எனவும் குற்றம் சாட்டியிருந்தது.
இந்தக் கப்பலில் மாலுமிகளுடன் பயணித்த மேலும் 06 பயணிகள் கடந்த வாரமே வேறொரு பிராந்திய நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் மாலுமிகளின் குடும்ப உறுப்பினர்கள் எனக் கருதப்படுகிறது.
தற்போது மாலுமிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலை அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கேப்டன் ஹாக்கின்ஸ் மேலும் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த மாலுமிகளின் இடமாற்றம் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது
