யாழ் – அரியாலை (செம்மணி) – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 52 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 47 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 12 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு இன்றும் (07) முன்னெடுக்கப்பட்டது.
பேராசிரியர் ராஜ் சோமதேவா ஏற்கனவே செய்மதி புகைப்படத்தின் ஆதாரத்துடன் அடையாளப்படுத்திய பகுதியில், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட மாணவர்களினால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன் போதும் புதிதாக சில மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதனை விடவும் அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் இருந்து மழை நீர் வடிந்தோடுவதற்காக நேற்றைய தினம் பைக்கோ இயந்திரம் மூலமாக வாய்க்கால் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன் போதும் சில மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து வாயக்கால் வெட்டும் பணியும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறு பிள்ளையின் எலும்புக்கூடு என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு தொகுதியுடன், ஆடைகள், பாதணி, பொலித்தீன் மாலை, மற்றும் நாணயக் குற்றிகள் போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.