பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் செயல்படும் ஒரு அரச வங்கியில், குறைந்த மதிப்புள்ள தங்கப் பொருட்களை அடகு வைத்து ரூ. 99,370,100 வரை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சந்தேகநபர்கள் அடமான பத்திரங்களில் போலி கையொப்பங்களை பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதியானதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 36 வயதுடைய உதவி அதிகாரியாகும். அவர் பாணந்துறையில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்டார். 37 வயதுடைய இடைநிலை நிர்வாக அதிகாரி ஒருவர் தலதாவத்த வீதியில் கைது செய்யப்பட்டதுடன், மேலும் ஒருவர் விஹார வீதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.