ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மற்றுமொருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10) இரவு 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரதோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் சடங்கு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடைய நிமலன் என்பவர் திடீரென மயங்கி விழுந்ததையடுத்து அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக் கொண்ட ஒருவர் மீது இன்னொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கல வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.