தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று விஜேராமாவின் இல்லத்திலிருந்து தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு புறப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் மொட்டு அரசியல்வாதிகள் கூடி வழியனுப்பி இருந்தனர்.
இதன்போது மகிந்தவை சந்தித்துவிட்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் சரத்வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்சவை அரச மாளிகையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் தமிழ் டயஸ்போராக்களே திருப்தியடைவார்கள்.
அவர்களுக்கே இன்றைய நாள் மகிழ்ச்சியை தரும் நாளாகும். அவர்களை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச என்பவர் சாதாரண நபர் கிடையாது. முழு உலகமுமே தோற்கடிக்க முடியாது எனக் கூறிய புலிகள் அமைப்பை தோற்கடித்து 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்தவர்.
மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கிய தலைவர் அவர்.நாட்டில் அபிவிருத்திகளை எற்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.