வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தாக்குகின்ற பாணியில் சென்ற விடயமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கும், வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் கூட்டமானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் வெளியே வந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா இரண்டு பெண் உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்போது குறித்த பெண் உறுப்பினர்கள் “நல்லூரை இடிக்கும்படி கூறினீர்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் “தையிட்டியில் போராட்டம் செய்கின்ற கூட்டம் நீங்கள் தான். இருந்து குளறுங்கள்” என்று கூறி பெண்கள் என்று கூட பார்க்காமல் அநாகரீகமான சொற்களால் அவர்களை திட்டினார்.
இதன்போது குறித்த பெண் உறுப்பினர்கள் “சேர் நீங்கள் மரியாதையாக பேசுங்கள், என்று கூறி விவாதித்தபோது அவர்களை தாக்குகின்ற பாணியில், குரலை உயர்த்தி மிரட்டியவாறு அரகே சென்றதை அவதானிக்க முடிந்தது. இருப்பினும் ஐந்திற்கும் மேற்பட்ட பொலிஸார் அந்த இடத்தில் நின்றபோதும் அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததை அவதானிக்க முடிந்தது.
