எரிபொருள் கியூ.ஆர். குறியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாகப் பகிரப்படும் போலி இணையத்தள இணைப்புகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசடியான இணைப்புகள், உத்தியோகபூர்வ கியூ.ஆர். குறியீட்டு முறைமைக்கு நேரடி அணுகலை வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றுகின்றன என சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இத்தகைய போலி இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி விபரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே சந்தேகத்திற்கிடமான அல்லது உத்தியோகபூர்வமற்ற இணையத்தளங்களின் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
வட்ஸ்அப், மெசஞ்சர் போன்ற செயலிகள் ஊடாக அறிமுகமில்லாத நபர்களால் அனுப்பப்படும் இணைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கவும்.
எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பெற எப்போதும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை மாத்திரம் பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
