ஆயுத கையளிப்பில் ஜெனரல் சரத் பொன்சேக்காவை தொடர்புபடுத்துமாறு உதய கம்மன்பில பிள்ளையானுக்கு ஆலோசனை வழங்கிய தகவல் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு பாதுகாப்பு அமைச்சினால் 400-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டமை அன்றைய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேக்காவின் உத்தரவின் பேரில் இடம்பெற்றதாகக் கூறுமாறு உதய கம்மன்பில பிள்ளையானுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிள்ளையான் கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது கட்சிக்காரருக்கு திட்டமிட்ட முறையில் பொய்ப் பிரசாரங்களை செய்யுமாறு அறிவுறுத்தியமைக்காக கம்மன்பிலவுக்கு எதிராக பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இது சட்டத்தரணிகள் ஒழுக்கக்கோவையை மீறும் செயல் எனவும் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியிலேயே இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் பிள்ளையான் சித்திரவதை முகாம் ஒன்றையும் நடத்தி வந்தமையும் தெரியவந்துள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரை ஒரு ஆண்டுக்கு மேல் கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
கடந்த (02.04.2026) அன்று அவர் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து சட்ட ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க கல்கிசை பிரதம நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டிருந்தார்.
சந்தேக நபரின் சார்பில் முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியான உதய கம்மன்பில பிள்ளையான் சார்பில் நீதிமன்றில் முன்னிலையானார்.
