யாழ்ப்பாணம்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயினாதீவு கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் (O/L) அகில இலங்கை ரீதியில் மிகச்சிறந்த பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதிபர் மயூரனின் மகனான ம. கஜவர்சன், வெளியிடப்பட்டுள்ள சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி அனைத்துப் பாடங்களிலும் “9A” சித்தியைப் பெற்றுத் தேறியுள்ளார்.

நயினாதீவு மகா வித்தியாலயத்தில் தனது கடமைகளை முடித்துக்கொண்டு, வழமை போல படகு மூலம் வீடு நோக்கிப் பயணித்த வேளையிலேயே கஜவர்சனின் தந்தை துரதிர்ஷ்டவசமாகக் கடலில் மூழ்கிப் பலியானார். தந்தையின் திடீர் பிரிவு தந்த பேரிடியும், குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்த சூழலும் கஜவர்சனின் கல்விப் பயணத்திற்குப் பெரும் சவாலாக அமைந்திருந்தது.
ஆயினும், நெஞ்சை உலுக்கும் அந்தத் துயரக் கடலையும் தாண்டி, தனது கடுமையான உழைப்பினாலும் மன உறுதியினாலும் கஜவர்சன் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பெற்ற தாய்க்கும், மறைந்த தனது தந்தைக்கும், பயின்ற பாடசாலைக்கும் மற்றும் ஒட்டுமொத்த நயினாதீவு மண்ணுக்கும் பெரும் பெருமை சேர்த்துள்ள மாணவன் கஜவர்சனுக்கு சமூக வலைத்தளங்களிலும், கல்வி வட்டாரங்களிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
