ஹிக்கடுவையில் தயாரிக்கப்பட்ட பாதணி ஒன்றில் “அல்லாஹ்” எனும் அரபு சொல் பொறிக்கப்பட்டதாக பரவிய சர்ச்சை குறித்து, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தனது உத்தியோகபூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.
ஹிக்கடுவையில் தயாரிக்கப்பட்ட பாதணி ஒன்றில் “அல்லாஹ்” எனும் அரபு எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட பாதணி தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
சர்ச்சைக்குரிய அந்தப் பாதணியின் வடிவமைப்பு, ‘Pinterest’ தளத்தில் பொதுவெளியில் கிடைக்கப்பெற்ற ஒரு கலை வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. எந்தவொரு மதத்தையோ, மதச் சின்னத்தையோ அல்லது ஒரு சமூகத்தின் மத உணர்வுகளையோ புண்படுத்தும் நோக்கம் தங்களுக்குத் துளியளவும் இல்லை.
இந்த வடிவமைப்பு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கலாம் என்பதை உணர்ந்த உடனேயே, 24 மணி நேரத்திற்குள் அந்த வடிவமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும், நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவரும் பொய்யான மற்றும் அடிப்படையற்ற தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், அவதூறுகளைத் தொடர்ந்து பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் எவரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ள அந்நிறுவனம், எதிர்காலத்தில் மேலும் கூடுதலான பொறுப்புணர்வுடன் செயற்படுவதாக உறுதியளித்துள்ளது.
