‘L’ அடையாள பலகைகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் சாரதி பயிற்சி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் அதிவேக வீதிகளுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
பயிற்சிக்கான அனுமதிப்பத்திரமானது சாரதிப் பயிற்சி பெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுகின்றதெனவும், அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவதற்கு அது செல்லுபடியாகாது எனவும் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிவேக வீதியில் வாகனத்தைச் செலுத்துவதற்கு முழுமையான செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் கட்டாயமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், முழுமையான சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற ஒருவர் அருகில் இருந்தபோதிலும், ‘L’ பலகை பொருத்தப்பட்ட வாகனங்களை அதிவேக வீதிகளில் செலுத்த முடியாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறும் வாகனங்கள் அதிவேக வீதிகளின் நுழைவாயில்களிலேயே தடுக்கப்படும் என்றும், சட்டத்தை மீறி நுழைபவர்களுக்கு எதிராக அபராதம் அல்லது நீதிமன்ற நடவடிக்கை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமான முறையில் வாகனத்தைச் செலுத்தும் போது ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில், காப்பீட்டுச் இழப்பீட்டுக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
