வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
1979 ஆண்டு இலக்கம் 15ஆம் குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை சட்டத்தின் 106 (1)இன் பிரகாரம் வவுனியா நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2026/09/12ஆம், திகதி நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் நைனாமடு காட்டு பகுதியில் அமைந்துள்ள புராதன பெறுமதி வாய்ந்த எச்சங்கள் கொண்ட பூமி பிரதேசத்தினுள் இந்து சமய வழிபாட்டாளர்கள் மூலமாகவும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் மூலமாகவும் சமய வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மற்றும் பூஜை நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் இந்து மத வழிபாட்டாளர்கள் மற்றும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் ஒரே திகதியில் ஒரேநேரத்தில் ஒரே பூமியில் இத்தொல் பொருள் அமைந்துள்ள இடத்தில் சமய வழிபாடுகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அக்காரணத்தினை அடிப்படையாக கொண்டு இரு தரப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் வன்முறைகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இருவர்களின் சமய வழிபாடுகளுக்கும் இடையூறு ஏற்படவும் பிரதேசத்தில் சமாதான சீர்குலைவு ஏற்படவும் இவ்வாறாக இடப்பிரச்சனைகள் தொடர்ந்தும் ஏற்படுவதாலும் இத் தளத்தினை பிரதான மையமாக கொண்டு நாட்டிற்குள் இன மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளமையினால் நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மேலதிக காரணங்கள் தொடர்பான விசாரணைக்கு10.09.2026அன்று மாலை 03.00 மணிக்கு இந் நீதிமன்றத்தில் பிரசன்னமாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு மாகாண தலைமை பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
