எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிக்கொண்டு வந்துள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின்போதே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் 8ஆம் திகதி வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் நபரொருவர் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அச்சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ‘நிஷங்க’ என்பவரின் மனைவியுடன் தனக்கிருந்த சட்டவிரோதத் தொடர்பே இக்கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்னர் குருவிட்ட பகுதியில் வைத்து அவரைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலையின் பின்னர் சடலத்தை அப்பகுதியில் உள்ள காணியொன்றில் புதைத்து, பின்னர் அங்கிருந்து எடுத்து அருகில் உள்ள ஆற்றில தூக்கி வீசியதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (25) அவர் சுட்டிக்காட்டிய இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போதிலும் சடலம் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவத்தை நேரில் அறிந்திருந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவரையும் சந்தேக நபர் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, அங்கே படுகொலை செய்து உடலை மறைத்துள்ளதாக விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அப்பெண்ணுடனும் சந்தேக நபர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்திருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
