அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இடையில் இன்று (09) நாடாளுமன்றில் தமிழ் மொழி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
ஹெக்டர் அப்புஹாமி எம்.பி, புத்தளம் மாவட்ட மீனவர்கள் தொடர்பிலான கேள்வியொன்றை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு அமைச்சர் சந்திரசேகர் தமிழ் மொழியில் பதில் அளித்திருந்தார்.
இதன்போது, ஹெக்டர் அப்புஹாமி எம்.பிக்கு அருகில் அமர்ந்திருந்த ஜே.சி.அலவத்துவல எம்.பி உட்பட பலர் கிண்டல் அடித்ததாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாட்டுக்கு கண்டனத்தை வெளியிட்டதுடன், தமிழ் மொழியில் பேசுவதற்கான அனைத்து உரிமைகளும் நாடாளுமன்றத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.
இதற்கு பதில் அளித்த ஹெக்டர் அப்புஹாமி எம்.பி, நாங்கள் தமிழ் எம்.பிகள் மற்றும் தமிழ் மக்களுடன் பழகுகிறோம். இவ்வாறான சிந்தனைகள் எம்மிடம் இல்லை. தமிழ் மொழிக்கான உரிமையை நாம் மதிக்கிறோம். அவர் தமிழ் மொழியில் பதில் அளித்தமைக்கான எவரும் இங்கு எதிர்ப்பை வெளியிட வில்லை. எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை. எவரோ ஒருவர் சிரித்தார் என்பதற்காக அது தமிழ் மொழில் பதில் அளிப்பதை எதிர்ப்பதாகிவிடுமா? இந்த விடயத்தை ஹென்சார்ட்டில் இருந்து நீக்குமாறு கோருகிறேன் என்றார்.
இதற்கு ஆளுங்கட்சி சார்பில் பதில் அளித்த அமைச்சர் சந்திரசேகரன், நானும் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்களாக இருக்கிறேன். எம்.பிகள் எவ்வாறு செயல்படுகின்றனர். அவர்களது பின்புலம் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிவேன். ஒன்றும் அறியாமல் இருக்க நான் சிறுகுழந்தை அல்ல. எனவே, இந்த விடயம் பற்றி மேலதிகமாக நான் பேச விரும்பவில்லை. சிங்கள மொழியல் பதில் அளித்திருந்தாலும் இந்தளவான நேரம் எடுத்திருக்கும் எனக் கூறினார்.
எதிர்க்கட்சி எம்.பி ஹெக்டர் அப்புஹாமி, இந்த விடயத்தை ஹென்சார்ட்டில் இருந்து அகற்றுமாறு கோரிய போதும் சபாநாயகர் அடுத்த கேள்வியை நோக்கி நகர்ந்து வாய்த்தர்க்கத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.