நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலைகள் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டவை என்பதோடு, இதில் சதித்திட்டம் மற்றும் சீர்குலைப்பு முயற்சிகளுக்கான அறிகுறிகள் தென்படுவதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நீர்கொழும்பு, மஹர, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய சிறைச்சாலைகளிலேயே இவ்வாறு அண்மைய நாட்களில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளே இந்த அமைதியின்மைக்கு உடனடிப் பின்னணியாக இருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் போது கைதிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு கைதியின் உயிரும் பறிபோகாத வகையில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதே முதன்மை நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலை நிலவரம் குறித்துப் பேசிய அமைச்சர், காலை உணவிற்குப் பின்னர் சுமார் 30 கைதிகள் கூரை மீதேறி உள்ளே செல்ல மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
காவல்துறையினரும் சிறைச்சாலை அதிகாரிகளும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றம் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“பொதுமக்களின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பல்லன்சேன சிறைச்சாலையின் சூழ்நிலையும் விரைவில் வழமைக்குக் கொண்டுவரப்படும்,” என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன், தொடர்ச்சியாகப் பல்வேறு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்களின் தன்மையைப் பார்க்கும்போது, இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட சீர்குலைப்பு நடவடிக்கைகள் மற்றும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பது புலப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
