கடும் காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பானது எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள குறித்த அறிக்கையில் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் கிழக்கே உள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் தற்போது குறைந்த அழுத்தப் தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.
இது மேலும் வலுவடைந்து இலங்கைக்கு அருகே வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றானது (55–65) கிமீ வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.
இதேவேளை கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.